Saturday, October 24, 2009

வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.

எழுச்சி கொள்க கவிஞர்களே!
தாயகமூச்சு எமக்கில்லையா?
ஆயிரம் தடைகளை ஆரும் போட்டாலென்ன?
உன்னிப் பெருமூச்செடுத்து உறவணைக்க எழுந்திடுக.

நோயுண்ணும் உடல் நலித்தும்,
பேயுண்ணும் உணர்வொழித்தும்,
தாய் நிலத்தின் வேதனையை - எம்
தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என
வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?
கூடாது... கூடவே கூடாது.

முற்றத்து மணற்பரப்பில்
முழுமதியின் எழிலொளியில்,
சுற்றம் சூழப் புற்பாய் போட்டமர்ந்து பேசி,
அடிவளவு மூலையிலே படர்ந்த
முல்லைச் சொதி மணக்கும்
கவளச் சோறெண்ணி,
ஏக்கங்களை மட்டுமே எமதாக்கி,
பனிநிலங்களில் உயிர் தொய்ய வாழ்கிறோமே....
விட்டுவிடுவோமா?

தாய்நிலத்தில் ஏறி நின்று அந்நியன் கூத்தாட
வாயொடுக்கி, மெய் நடுக்கி விதியென்று கிடந்திடவோ?....
புலம்பெயர்ந்து கிடந்தாலும் புலன் மாறக்கூடாது.

வலியென்று துடித்தாலும்,
'அம்மா" என்றழைத்து விழுந்து புரண்டாலும்
எமைத் தாங்கிப் பிடிக்கின்ற தாய்மடியைத்
தவிப்பெய்த விட்டிடவோ....
தமிழச்சாதியாய் தரணிக்குள் பிறப்பெடுத்தோம்?

வாகை சூழ்ந்திருக்கும்,
வன்னிமேனியிலே சோகம் படர்ந்திடுமோ?

வாயாரத் தமிழ் தொடுத்து வல்கவிகள் நல்கும் கவிமுரசுகளே!
காலம் எம் காலடியில் கைகட்டி நிற்கிறது.
வாழ்வை வனைய வல்லமைபூட்டி
எழுதுகோல்கள் எழுந்துதான் ஆகவேண்டும்.
இது காலக்கட்டளையும் கூட..

ஆவி துடித்திருக்கும் விழுதுகளின் ஓரவிழிக்கசிவில்
தாயை மீட்கின்ற பாதிப்பலமிருக்கும் சேதியைக் கூவி முழங்குக.

நிமிர்ந்த தானை செருக்கோடு தலைவன் வழி தொடருகையில்
மேதினி வாழ் தமிழின் போர் முரசங்கள்
மேனி நுடங்குதல் ஆகாது.

சோகச் சுமை ஏந்தலும், ஓர்மக்குரல் அடைத்தலும்
எழுதுகோல் வல்லமைக்கு இழிவல்லவா...

வல்லமை நலிந்தால் வளவுக்குயில் பாடாது.
வசந்தம் தாய்மண்ணைத் தழுவி மகிழாது.
முற்றத்து மலர்களால் முகம் சிவக்கமுடியாது.

போர் மூசிய பேய்க்காற்றை எதிர்கொள்ளும்
பலம் தர நாமுள்ளோம்.
அஞ்சற்க....என தாயக உறவுகள் நோக்கி
ஆயிரமாயிரம் கவி படைத்து எழுக எம் கவிஞர்களே.

இன்று,
காலக் கட்டளை ஈழத்தமிழரின் திறவுகோல்கள் அற்ற
இதயவாசல்களையும் இடித்துப் பெயர்த்துளது.

பழி சூழும் நிலை எங்கள் பரம்பரைக்கு வந்திடுமோ என
இதுவரை காலமும் விழிமூடி நடித்தோரும் வெம்பி எழுந்துளர்.

உப்புக் காற்றுரசும் ஊர்மடியின் நினைப்பூற,
நேற்றுவரை செக்கிழுத்தோரும் சீற்றத்தில் கனல்கின்றர்.

அள்ளிப்பிடித்திருக்கும் ஆவி ஓய்ந்தால் கொள்ளிக்குத்தன்னும்
குலந்தழைத்தமண் வேண்டுமென சொல்லித் துடிக்கின்ற
சொந்தங்களும் எழுந்துளர்.

பள்ளிக் காலத்தில் பதிவிட்ட சித்திரத்தை
சில்லுருட்டி விளையாடிய செம்பாட்டுப் புழுதிமண்ணை
கல்லுக்குத்தி வைத்த தேர்முட்டி மூலைகளை
எண்ணி மகிழ்வோரும் எழுச்சியுற்று விரிந்துள்ளர்

எனும் சேதிகள் எங்கள் சொந்தங்களைச் சென்றடைய வேண்டும்.

வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.
வசந்தம் தாய்மண்ணைத் தழுவி மகிழாது.
முற்றத்து மலர்களால் முகம் சிவக்கமுடியாது.

நோயுண்ணும் உடல் நலித்தும்,
பேயுண்ணும் உணர்வொழித்தும்,
தாய் நிலத்தின் வேதனையை - எம்
தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என
வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?
கூடாது... கூடவே கூடாது.

மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி சிதைகளை மூட்டிய வரலாறு எமக்குண்டு.

விழுகை என்பது விதிப்படியும்

எழுகை என்பது வினைப்படியும்

நிகழ்ந்தே ஆகவேண்டும்.


நேற்றொரு நாள்

சத்திய வேள்வியில் திலீப சொரூபம் தீய்ந்த போது

கண்ணீரில் கருத்தரித்தது கால நெருப்பு


இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம், புனைவெல்லாம்

விடுதலைத் தழலில் வெந்து போயின.


சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது.

இந்தியத்தை விட்டு

காந்தீயம் கப்பலேறிக் காணாமல்போனது.


இனத்தின் நித்திய வாழ்வுக்கு

நிம்மதியைக் கேட்ட சத்தியத்தேவன்

சருகாய் உலர்ந்து உயிர் களைந்தான்.


பிராந்திய வல்லரசின் சூழ்ச்சி

தோற்றதன் எதிரொலியை

ஈழத்தின் முற்றம் வடுக்களாய் ஏந்தியது.


மக்களின் தோள்களே மண்மீட்பைச் சுமந்தன.


ஒப்பாரியின் உள்ளொலியில்

பறைகளும் முரசுகளும் அதிர்ந்தன.


கால நெருப்பை ஏந்திய கண்களே

காவல் தெய்வங்கள் ஆயினர்.


அடைக்கலம் தந்த உறவுகளே

ஆற்றல்களையும் வழங்கினர்.


இன்னலைச் சுமந்த இருப்புகளே

ஈழத்தை மனதில் ஆழப்படுத்தின.


முகாரிகளை இசைத்தபடியே

புல்லாங்குழல்கள் பூபாளத்தை நோக்கி நகர்ந்தன.


பிணம் புழுத்த வீதிகளிலேயே

பிரசவங்களும் உதிரத்தைப் பாய்ச்சின.


மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி

சிதைகளை மூட்டிய வரலாறுகள் தோன்றின.


எண்ணிக்கையற்ற வலிகளைச் சுமந்தும்

எழுகையே எங்களின் இருப்பை வனைந்தது.


இன்றைகள் மட்டுமேன்....

துருவ முனைகள் வரைக்கும்

உறைந்து கிடக்கிறது மூளா நெருப்பு!


பூபாளத்தை மறந்து புல்லாங்குழல்கள்

முகாரிகளையே முழுமை என்கின்றனவே!!!


ஒலியை இழந்தால்

பறைக்குப் பெருமையில்லை


பாதி வழியில் நின்று விட்டால்

பயணத்தில் முழுமையில்லை


விதியென்று ஓய்ந்து விட்டால்

மதியிருந்தும் பலனில்லை


விழல் என்று முடிவெடுத்தால்

விடுதலைக்கு இடமில்லை


நித்திய வாழ்வுக்காய்

நிம்மதியைக் கேட்ட இனம்

சத்திய வாழ்வின் சருகாகிக் கிடப்பது

காலநீட்சியின் காட்சி ஆதல் கூடாது


மாற்றமே இல்லாதது மண்மீட்பு.


மீட்சியின் திசையில் காற்றெழும் காலமுணர முடியாமல்

தத்தளித்து நிற்பது எவருக்கும் இயல்புதான்


கடந்த காலத்தின் நீட்சியை ஒரு கணம்

காட்சிப்படுத்தல் காலத்தின் அவசியம்.


மீண்டும்…..

கண்ணீரில் கருத்தரிக்கட்டும் காலநெருப்பு.

குப்புறக்கிடந்தால் சுவாசமே சுமைதான்



படுக்கையில் கிடந்தபடி

பாதை கேட்காதே

எழு….. உடல் முறித்து,

பத்தடி நட.

பாதை தெரியும்.

குப்புறக் கிடந்தால்

சுவாசமே சுமைதான்.


திரும்பிப் பார்.

விடுதலைக்காக கடந்த

தணற்காடுகளும், சதுப்பு நிலங்களும்

பார்வையில் புலப்படும்.

தணற்காடுகளில் தீய்ந்தபோது

நெஞ்சம் வேகியது

சதுப்பு நிலங்களில் புதைந்தபோது

சலனம் ஆடியது.

மீள எழவில்லையா?


களத்திலேயே மீண்டெழுந்த

உனக்கு புலத்திலேன் தடுமாற்றம்?

போராட்டக்களம் மாறியிருக்கிறது.

இப்போது சூறாவளி அவ்வளவே.


ஒட்டுமொத்த இன அழிப்பை

உலகம் கணக்கெடுக்கிறது.

துயர் கொல்லுதென்று

நீ முடங்கிவிட்டால்

இழப்புகள் கூட

மௌனித்துப் போகும்.


அழுவதாகிலும்...

அம்பலத்தில் நின்று அழு.

இது உனக்கு மட்டுமான வலியல்ல

நம் இனத்திற்குத் திணிக்கப்பட்ட பெருநோ.


நீட்டிப் படுத்திருந்தால் நீதி கிடைக்காது.

எத்தனை பெரிய துயரில் இருக்க

இரக்கமில்லாமல் எழுதுகிறாய்

இழந்திருந்தாலே உனக்குத் தெரியுமென்பாய்.


முள்ளிவாய்க்காலில் மட்டுமா இழப்பு?

முள்ளு வேலிக்குள் தொடர்ந்தே செல்கிறது.

உருகும் விழிநீரில் நீ புதையுண்டால்

பெருகும் துயர் தீர்க்கப்

போராடுவது எப்படி?


விழி நீரை விரட்டு.

வேதனையை உரமாக்கு.

எழு தீயில் ஒளியேற்று.

ஓர்மத்தை நிறமாக்கு.

உயிருக்கு ஆணையிடு.

இவ்வளவும் போதும்.

உணர்வாய். நீயே வழிகாட்டி.

பொன்னள்ளிச் சொரியும் பெரிய தேவனே! உன்னை இனி நானே பாடுவேன்


கண்ணெதிரே கலையுமா கனவு?

மண்ணெனவே உதிருமா மனது?

நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம்

ஒப்பேற முன்னரே உருகியா போகும்?

இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட

மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை?


இது காலச்சுழி

சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது.

சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும்.

தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும்.

நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும்.

மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும்.

மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும்.

உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும்.


இன்றைய பொழுதுகள் எமக்கானவை.

ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர்

முக்காற்சுற்று முடித்துவிட்டது.

சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ளிக்கு

பின்னோக்கி விட்டதென்று அதிவேகமாக அலம்புகின்றர்.

காது கொடுக்காதே.. கலங்கிப் புலம்புவாய்.


நம் கையில் வாழ்வு வசப்பட்டே ஆகவேண்டும்.

மாவீரத்தோள்கள் சுமந்த வரலாற்றை

முனை கூர்த்தி நகர்த்தியே தீரவேண்டும்.

ஆழக்கிணறு வெட்டி ஊற்றுவாயை அண்மித்துவிட்டு

உடல் நோகுதென்று உடைந்து போகக் கூடாது.

வெம்பிச் சோர்தல் வேதனையைத் தீர்க்காது.


என்ன இருக்கிறது?

எல்லாம் துடைத்தழித்து நகைக்கிறது பகைமுகம்.

உயிர்கூடு ஒன்றுதான் மீந்துபோய் உள்ளது.

அச்சப்பட்டதற்காய் அங்கெவரும் காப்பாற்றப்படவில்லை.

அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளர்.

உறவுகளைத் தினம் நினைத்து நீ உக்கி கிடப்பதனால்

உந்தி எழும் வல்லமையின் உறுதியை தொலைத்துள்ளாய்.

கண்ணுக்குத் தெரியாமல் பகை உன்னைக் கட்டிப்போட்டுளது.


மெய்யுரைத்துத் தீக்குளிக்கும் தைரியம் பெறு.

புலத்திற்குள் பொருந்திக் கொள்.

புலன் தெளிவுறு.

உன் புன்னகையைப் பறித்துப் புதைகுழியில் இட்டோர்க்கு

எண்ணிப்பார்க்காத கண்டத்தை உருவாக்கு.

கால எழுதியிடம் புதுக் கணக்கை திற.

ஊர் மனையேறியே உறங்குவதாய் சபதம் எடு.

ஏழ்புரவி ரதத்தினிலே எழும் தேவன்

பஞ்சபூதங்களாய் பலவழிகள் திறந்துள்ளான்.

அவன் ஆசி பெற்ற பெரும் யாகமிது.

அழிவுற்றுப் போகாது.


பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே!

உன்னை இனி நானே பாடுவேன்.

அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த

என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை

உன்னை இனி நானே பாடுவேன்.

என்வேர் மடியைக் கிழிந்துவதம் செய்யும்

கொடும் பகையே உனை எதிர்க்க நானே கோலோச்சுவேன்.

விழுதனைத்தும் பிணைத்து, வேர்நிலத்தில் ஆழப்படர்த்தி,

மீண்டெழும் மிடுக்கை மிகைப்படுத்துவேன்.

புலம்பெயரிதான் இருப்பினும் என் பொல்லாப் பொறியின்

கூர் உனை பொசுக்கும்.


பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே!

உன்னை இனி நானே பாடுவேன்.

அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த

என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை

உன்னை இனி நானே பாடுவேன்.

நீங்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும்...

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட வரிகள். இன்னும் முன்னிலும் அதிகமான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு, பட்டிகளுக்குள் முடக்கப்பட்டதான வாழ்வு???? வல்லாண்மைகளின் பெருவிருப்பு சிங்கள் இனவாத முகங்கொண்டுள்ளதை இன்றைய நாட்கள் உணர்த்தியபடியேதான் நகர்கின்றன. நீங்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் எங்களின் தாயக மீட்பை ஆதிக்கக் கூப்பாடும் ஆலகால விடமும் பாதிக்க முடியாது. பார்த்திருங்கள் மடுவினில் தேங்கும் தாயக மீட்பலை மலைகளைத் தகர்த்து எழும். நேற்றைய நாட்களின் இவ்வரிகளை மீண்டும் மீண்டும் மீட்பித்து எதுவரை நாங்கள் உலகிற்கு மதிப்பளித்தோம் என்பதை பறை சாற்றியபடியே தடுக்கும் சக்திகள் அனைத்தும் உடைப்போம். இது தாயை மீட்கும் யாகம் அணையாது.




Fri, 03/11/2006
அழைக்கின்றீர்கள்.... மதிப்பளிக்கிறோம்....
மனிதம் செத்திருக்கும் அனைவரிடமும்
இன்னும் மானுடத்தை எதிர்பார்த்தபடி....
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி....
கரங்களோடு எங்கள்...
கண்ணீரையும் கட்டுப்படுத்தி...
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.

எம் உறவு...
எம் வீடு...
எம் ஊர்...
எம் தேசம்..
எங்களுக்கானதை எம்மிடம் சேர்க்க
ஆவன செய்ய உங்களால் இயலுமா?

எங்களை நாங்களே காத்திடத் துணிந்ததை
பயங்கரவாதப் பட்டியலில் இடுகிறீர்!
நசியுண்ட எறும்பும் தனைக் காக்கக் கடிக்கும்
அது உங்கள் பார்வையில் பயங்கரவாதமா?

உயிர்வலி எங்களுக்கு...
உணர்வுகளைத் தூக்கிலிட்டு
எங்கள் சாவிற்கு...
எமனுக்கு வரவெழுத எமக்கென்ன தலைவிதியா?

மறுபடியும், மறுபடியும் மரணத்தின் ஓலம்தான்
மண்ணிடையே எமக்கான விதியாக்கப்படுகிறதே.

கண்ணிருந்தும் குருடான கதை உங்களதா?
உலக நாடுகளே!
உங்கள் எவராலும் விதி மாற்ற முடிந்ததா?
தடை போட்டீர்கள்..
காரணக் கதைகள் ஆயிரம் உரைத்தீர்கள்.
அல்லைப்பிட்டி, வங்காலை, வல்லிபுனம், சம்பூரென
எள்ளி நகைக்கிறதே உங்கள் காரணங்கள்
அவை உங்களுக்குப் புரிகிறதா?

வாழ்வுக்காய் எங்கள் போராட்டம்
கொடிய கந்தக நெடியிடையே எம் வாழ்வோட்டம்
புனர் வாழ்வும் முடக்கப்படும் பூமியிலே
ஏதிலிகளாய் எம் வாழ்வும் தொடரும்
புரிகிறதா?......
அல்லது புரியாமலே இன்னும்
உண்மையொளி காணாக் குகையில்
இருள் மூடிக் கிடக்கின்றீர்களா?

கிழக்கு முகம் கறுப்பதில்லை
காலதேவன் கிறுக்கலிலே
சூரியன் இருண்டதில்லை.
கோல விளக்கொளியில் கூறுகெட்ட வாழ்வெமதல்ல..
கந்தகப் பிழம்பிடையே.. களமாடும் புதல்வர்களைக்
கொண்டெழுந்ததே எமது வாழ்வு.

திசைவெளிகள் எங்கெனும் இசைவாக்கம் என்பது
எம்மினத்தின் அசையாத வாழ்வுக்கான தவம்.

உயிரெடுத்து உரம் தொடுத்த
எங்களின் தாயகத்து மண்மீட்பை...
ஆதிக்க கூப்பாடும், ஆலகால விடமும்
பாதிக்க முடியாது

ஆதலால்....
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
உயிர் வலிகளை எடுத்துரைக்க...,
உங்களின் மானுட உயிர்ப்பை அளவெடுக்க..
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி....
கரங்களோடு எங்கள்...
கண்ணீரையும் கட்டுப்படுத்தி...
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.



இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட வரிகள். இன்னும் முன்னிலும் அதிகமான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு, பட்டிகளுக்குள் முடக்கப்பட்டதான வாழ்வு???? வல்லாண்மைகளின் பெருவிருப்பு சிங்கள் இனவாத முகங்கொண்டுள்ளதை இன்றைய நாட்கள் உணர்த்தியபடியேதான் நகர்கின்றன. நீங்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் எங்களின் தாயக மீட்பை ஆதிக்கக் கூப்பாடும் ஆலகால விடமும் பாதிக்க முடியாது. பார்த்திருங்கள் மடுவினில் தேங்கும் தாயக மீட்பலை மலைகளைத் தகர்த்து எழும். நேற்றைய நாட்களின் இவ்வரிகளை மீண்டும் மீண்டும் மீட்பித்து எதுவரை நாங்கள் உலகிற்கு மதிப்பளித்தோம் என்பதை பறை சாற்றியபடியே தடுக்கும் சக்திகள் அனைத்தும் உடைப்போம். இது தாயை மீட்கும் யாகம் அணையாது.

அரவி அரவித் தகிக்கும் சுகிப்பில் இரைமீட்டிகள்



செக்கில் கட்டிய மாடுகள் சுற்றின.

போராட்டம் முடிச்சவிழ்த்தது.

பழக்கத்திலிருந்து விடுபடாமல்

செக்கையே திரும்பத் திரும்பச் சுற்றின.

முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டிருப்பதை

உணர்த்தியபடியே போராட்டம் வளர்ந்தது.


அருகாமையில் குண்டுகள் வீழ

சிதறித் திக்கெட்டும் பிரிந்தவை

பசுமை வெளிகளையும்,

பனிபடரும் குளுமை தேசங்களையும்

தம் வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டன.


ஈழச்சமூகத்திலிருந்து அகற்றப்பட்ட ஒன்றை

இருப்பதாய் உரைக்கும் பழையவை.....


புலம்பெயர்விலும்

முப்பது ஆண்டுகளுக்கு பின்னோக்கிப் பேசும்

வழமையில் இருந்து மாற்றமடையாது

முடிச்சுகளுக்குள் தத்தம் கழுத்துகளை நுழைத்து

அரவி அரவித் தழுவும் சுகிப்பில் திளைத்தபடி

இன்னும் இரைமீ்ட்கின்றன.


நாகரீக வெளிகளின் மெருகேற்றலில்

செக்கிழுப்புகள் பரவுகின்றன.

சரி,......

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுங்கள்.


அத்தனை பேரும் உத்தமர்தானா?

அடுத்த தலைமுறை கேட்கும்.

ஒப்பாரிக்குமேல் ஒன்றேதும் உண்டென்றால்..

tamil1.jpg

கண்ணீர், செந்நீர்

ஒப்பாரி, நடைபிணம்

காட்சிப்படுத்தலின் உச்சம்.

தென்னிலங்கைத் தெருக்களில்

இனவாதப் பேய்களின் பிணக்கூத்து.

விழி பறிக்க ஒரு கூட்டம்

வீதியிலே மொழி கேட்டு

முடமாக்க ஒரு கூட்டம்.

கடை நொறுக்க ஒரு கூட்டம்

குடி பறித்துக் களவாட ஒரு கூட்டம்.

பெண்மை சீண்ட ஒரு கூட்டம்.

பின் புணர்ந்து பிணமாக்க ஒரு கூட்டம்.

தார் கொதியத்தில் குழவியிட,

கொதிக்கும் குறியிழுக்க,

கொங்கைகள் அறுத்தெறிய…

மிதிக்கும் காலடியில்

மென் மழலை துடித்தலற,

தாய்மையிடும் ஓலத்தையும்

இரசிப்பதற்கு ஒரு கூட்டம்.

நிர்வாணப் படுத்தியதும்

உயிர்விதையில் மிதித்து

ஓலமிட வைத்ததுவும்

பெற்றவன் உற்றவன்

பெற்றெடுத்த மக்களின் முன்

எத்தனை பெண்களை?

எத்தனை மிருகங்கள்?

ஓர் உயிர் சிதைக்க

ஒரு நூறு இனவாதியர்

பேதைத் தமிழனைப்

பிய்த்தெறிந்த வரலாறு.

ஒப்பாரிக்கு மேல்

ஒன்றேதும் உண்டென்றால்

அதுவே அன்றெம் தமிழர் நிலை.

புலம் பெயர் உறவுகளே!

தமிழர் விழி பறிப்பால்,

கொதிக்கும் குறியிழுப்பால்,

பெண்மையுற்ற பெரு வலியால்,

பிஞ்சுகளின் உயிர்ப் பிசைவால்,

மொழியுற்ற கலியால்,

இனவாதப் பிணக்கூத்தால்,

உடல் பிய்ந்து துடிதுடித்து

உயிர் துறந்த உறவுகளால்

வாழ்வெடுத்து வந்தவர் நாம்

இன்று நினைவுபடுத்தலின் உச்சம்.

வாழ்வெடுத்து வந்து விட்டு

வலி மறந்து போனோமா?

ஆள்பவரில் மாற்றமில்லை

மாள்வு ஈழத்தமிழர் மேல்

மாலையிட்டே நிற்கிறது.

வாழ்ந்த மண், சூழ்ந்த கலி

வந்த மண்ணில்ச் சொல்லி

ஆழ்ந்த துயர் களை!

அகிலம் என்னும் கரம் பற்றி

அன்னை விழி துடை!

இனவாதப் பேய் தின்ற

உறவுகள் சாந்தி பெற

இனம்வாழ உடன் இயங்கு!

இன்று நினைவுபடுத்தலின் உச்சம்.

எத்தனை ஆண்டுகள்?

எத்தனை வாதைகள்?

இன்னும் செத்தவர் பட்டியல்

தொடர்கதை ஆகுது.

குடிமனை இழப்பதும்,

குறவர்போல் அலைவதும்

உறவுகள் சரிவதும்,

உதிரத்தில் குளிப்பதும்,

கருணையே இல்லையா?

சர்வ தேசங்களே!

விழி அகலத் திறந்தெங்கள்

வேதனையைப் பாருங்கள்!

மெய் அறிய வாருங்கள்!

இனவாதம் குதறும் எம்

வாழ்வியலை கணக்கெடுங்கள்!

போர் எங்கள் கைகளிலே

திணிக்கப்பட்ட நிலை உணர்வீர்!

தடை என்னும் தராசினிலே

தாழ்ந்திருக்கும் தவறறிவீர்!

ஒப்பாரிக்கு மேல்

ஒன்றேதும் உண்டென்றால்

அதுவே இன்றுமெம் தமிழரின் நிலை காண்பீர.;

இது நினைவுபடுத்தலின் உச்சம் மட்டுமல்ல

நிகழ்வுகளின் வலி உரைப்பு.

tamil2.jpg